சித்திரப் பேச்சு: மலைக்கோட்டை மகிமை

சித்திரப் பேச்சு: மலைக்கோட்டை மகிமை
Updated on
1 min read

ஓவியர் வேதா

சிற்பக் களஞ்சியங்கள் நிறைந்த திருச்சிராப்பள்ளி நகரத்தின் நடுவே 237 அடி உயரத்தில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. புவியியல் ஆய்வுப்படி 35,000 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த சிராப்பள்ளி குன்று. செங்குத்தான வழுக்குப் பாறையால் ஆன இந்தக் குன்றின் மீது 150 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்ட கட்டிடத்தை உலகமே அண்ணாந்து பார்க்கிறது.

பொது ஆண்டு 580-ல் பல்லவர்களாலும் பின்னர் சோழர்களாலும் சந்நிதிகள் கட்டப்பட்டன. உச்சிப்பிள்ளையார் சந்நிதிக்குச் செல்வதற்கான படிகள் மலைமீதே செதுக்கப்பட்டுள்ளன. வழியில் மணிமண்டபம் அமைத்துள்ளது. அதில் ஒன்றரை மீட்டர் உயரமும் இரண்டரை டன் எடையும் உள்ள மணி உள்ளது.

காலை, பகல், இரவு எனக் குறிப்பிட்ட நேரத்தில் ஒலிக்கும் இதன் ஓசை சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை கேட்குமாம். குளக்கரையில் இருந்து மலைக்கோட்டையைப் பார்க்கும்போது அழகாகவும் கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது. இந்த மலையைச் சுற்றிலும் கோட்டைச் சுவர்களும் அகழியும் இருந்தனவாம்.

கோட்டை இருந்ததன் அடையாளமாக 'மெயின் கார்டு கேட்' எனும் நூழைவாயில் சுவர் மட்டுமே உள்ளது. மெயின் கார்டு கேட் எதிரில் அகழியைத் தூர்த்து, அந்த இடத்தில் புனித லூர்து அன்னை தேவாலயம் கம்பீரமாக நிற்கிறது. அதன் உச்சியில் உள்ள சிலுவையின் உயரம் 8 அடி. மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘நாத்தர் வலி தர்க்காவும்’ ஊரின் மையத்தில் உள்ளது. சோழர்களும் நாயக்க மன்னர்களும் இந்தக் கோட்டைக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in