

சண்டீசர் பதம் என்பது ஒரு நிர்வாக அதிகாரி பதவியாகும். சிவாலயத்தின் நிர்மால்ய அதிகாரப் பதவி. நிர்மால்யம் என்பது சிவபெருமானுக்கு படைத்த பொருள்களையும், அவருக்கு அணிவித்த ஆடைகள், மாலைகள் என அனைத்தையும் குறிக்கும் சொல். நிர்மால்யம் என்ற சொல்லுக்கு நிகராக சிவப்பிரசாதங்கள் அல்லது சிவ நிவேதனங்கள் என்று கொள்ளலாம்.
யார் சிவன் மீது அதீத பக்தியையும், சிவ நிந்தனை செய்வோரிடத்து அதீத கடுமையும் கொள்கிறார்களோ, அவர்களுக்கு சிவன், சண்டீசர் என்ற பதவியைத் தருகிறார். நான்முகனான பிரம்மா ‘சதுர்முக சண்டீசர்’ என தில்லையிலும், தர்ம அதிகாரியான யமதேவன் ‘யம சண்டீசர்’ என திருவாரூரிலும் உள்ளனர். மற்ற சிவாலயங்களைப் பொறுத்தவரை சண்டீச பதவியில் இருப்பவர் விசாரசருமர் எனும் சிவபக்தர்.