

சத்திய லோகத்தில் பிரம்மதேவர் தனது வழிபாட்டுக்காக, ஸ்ரீமன் நாராயணனின் விக்கிரகம் வேண்டி தவம் இருந்தார். அதன் பயனாக, காயத்ரி விமானத்தின்கீழ் ஸ்ரீரங்கநாத பெருமாள் சயனித்திருக்கும் விக்கிரகம் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியது. அதற்கு நித்ய திருவாராதனம் செய்து பிரம்மதேவர் வழிபட்டு வந்தார். சூரிய வம்சத்து அரசர்கள் அயோத்தியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.
இவர்களில் இக்ஷ்வாகு என்ற அரசன், பிரம்மதேவரை நோக்கி தவமிருந்து, அவர் வழிபட்டு வந்த ஸ்ரீரங்கநாத பெருமாள் விக்கிரகத்தை பரிசாகப் பெற்றான். அயோத்தியில் சரயு நதியின் நடுவேயுள்ள தீவில், அந்த விக்கிரகத்தை வைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தான். இக்ஷ்வாகுவால் பிரம்ம லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வந்ததால், ஸ்ரீரங்கநாத பெருமாளை, இக்ஷ்வாகு குலதனம் (இக்ஷ்வாகுவின் சொத்து) என்று அழைப்பார்கள்.