

பாரத தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் பக்தி இயக்க காலம் தொடங்கி இன்றைய நாகரிக காலம் வரை நம்முடைய இந்து சமயத்தில் பல்வேறு மாற்றங்களைக் காண முடிகிறது. இதற்கு அன்றைய காலகட்ட ஆட்சியாளர்களின் சூழ்நிலை, மனிதனின் எண்ணங்கள், கால சூழ்நிலை காரணங்களாக அமைந்தன.
சமயத்தின் ஒவ்வொரு நிகழ்வும் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து பக்திநெறியை வளர்ப்பதற்குத்தான் நடைபெற்றன. அந்த வகையில் ‘ஸ்ரீ ராதா கல்யாணம்’ என்ற வைபவம் தொன்று தொட்டு நடைபெறும் ஒரு கலாச்சார நிகழ்ச்சி. ராதா கல்யாணம் என்பது இறைவனின் திருமண சடங்கு போன்று இல்லாமல், ஜீவாத்மா - பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்தும் வண்ணம் உள்ளது. தென்னிந்திய பஜனை சம்பிரதாயத்தை ஒட்டி நாமசங்கீர்த்தனத்துடன் பழமை மாறாமல் வைதீக முறைப்படி இன்று வரை தமிழகத்தின் பல கிராமங்களில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோற்சவம் பல வருடங்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.