

பொங்கல் திருவிழா, தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்று விழாக் கோலம் பூண்டு காணப்படும் தை மாதம், பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. தைப்பூசம், தை அமாவாசை தினத்தில் கோயில்களிலும், நீர் நிலைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை சிறப்பான நாளாகவும் திதியாகவும் கருதப்படுகிறது. நம் முன்னோருக்கு திதி தர்ப்பண காரியங்கள் செய்வது நாம் காலம் காலமாக கடைபிடித்து வரும் கடமைகளில் ஒன்றாகும், அப்படி வருடம் முழுவதும் வரும் அமாவாசையில் நம்மால் திதி கொடுக்க முடியவில்லை என்றாலும், வருடத்தில் ஒரு முறையாவது நமது முன்னோருக்கு திதி கொடுப்பது நமது குடும்பம் வளம் பெறவும், நமது சந்ததிகள் நலம் பெறவும், நம் வாழ்க்கையில் பல நல்ல நிகழ்வுகள் நடக்கவும் உறுதுணையாக இருக்கிறது, சரியாக திதி கொடுத்து வரும் குடும்பங்களில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் சிறப்பாக நடைபெறுவதை நாம் பார்க்கிறோம், நம் முன்னோருக்கு வணக்கம் செலுத்த செலுத்த அவர்களது ஆன்மா நம்மை ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கும், இதனால் நம் வாழ்க்கை பல்வேறு வகையில் மேம்படுகிறது, ஜனவரி மாதம் 29-ம் தேதி அமாவாசை தினம், திருவோணம் நட்சத்திரமும், வியதிபாதம் நாமயோகமும் கூடிய அருமையான நாளாக அமைந்துள்ளது.