

சிறுகூடல்பட்டி முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கவியரசு கண்ணதாசன், கண்ணன் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல, கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை, கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை, கங்கைக் கரை தோட்டம், கண்ணன் வந்தான் போன்ற பாடல்கள், கண்ணன் மீது கண்ணதாசன் கொண்ட ஈடுபாட்டை பறைசாற்றுகின்றன.
காதல், மனைவி, குழந்தை, குடும்பம், சமுதாயம், மகிழ்ச்சி, விரக்தி என அனைத்திலும் கண்ணனை வைத்து கண்ணதாசன் பாடியுள்ளார் என்பதை ஓர் ஆராய்ச்சி கட்டுரை போல், சுவை குன்றாமல் ஆசிரியர் தென்காசி கணேசன் அளித்துள்ளார். இத்துடன் பகவத் கீதை, மகாகவி பாரதி, வேத கருத்துகள், ஆதிசங்கரரின் ஸ்லோகங்கள், திருமூலர், ஜகத்குருக்கள் ஆகியோரின் உபதேச மொழிகள் ஆகியவற்றை கண்ணதாசன் உள்வாங்கி எழுதிய பாடல்களையும் குறிப்பிட்டுள்ளார்.