மனக்கவலைகள் நீக்கிடும் கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள்

மனக்கவலைகள் நீக்கிடும் கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள்
Updated on
2 min read

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் (கண்டன க்ஷேத்ரம், பஞ்ச கமல க்ஷேத்ரம்) ஹரசாப விமோசன பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 7-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பிரம்மதேவர், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.

ஈசனுக்கு 5 திரு​முகங்கள் இருப்பது போல் பிரம்​மதேவருக்​கும் 5 திரு​முகங்கள் உண்டு. (ஈசனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திரு​முகங்​கள்.) ஒருசமயம் ஈசனுக்கு ஈடாக தன்னை​யும் நினைத்​துக் கொண்டு மிகுந்த கர்வத்​துடன் செயல்​பட்​டார் பிரம்​மதேவர். இவரது ஆணவத்தை அடக்க வேண்​டும் என்று எண்ணிய ஈசன், பிரம்​மதேவரின் ஐந்து தலைகளில் நடுத்​தலையை கிள்ளி எறிந்​தார். அன்று முதல் பிரம்​மதேவர் நான்​முகன் ஆனார்.

பிரம்​மதேவரின் தலையை கிள்ளி எறிந்​த​தால் ஈசனுக்கு பிரம்​மஹத்தி தோஷம் பிடித்​தது. மேலும் கிள்ளி எறியப்​பட்ட கபால​மும் ஈசனின் கையில் ஒட்டிக் கொண்​டது. தனது பிரம்​மஹத்தி தோஷத்​தைப் போக்கு​வதற்​காக, சிவபெரு​மான் தலங்​கள்​தோறும் சென்று தரிசிக்​கலானார். ஓர் இடத்​தில் கபாலம் விழுந்​தது. விழுந்த இடத்​தருகே திரு​மால் இருந்​தார். அந்த இடமே பூரணவல்​லி​யுடன் அருள்​பாலிக்​கும் ஹரசாப விமோசனப் பெரு​மாள் கோயில் ஆகும்.

ஈசனின் (ஹரன்) சாபம் தீர்த்​த​தால், இத்தலப் பெரு​மாள் ஹரசாப விமோசனப் பெரு​மாள் (கமல நாதன்) என்று அழைக்​கப்​படு​கிறார். (தாயார் – கமலவல்லி நாச்​சி​யார்). இக்கோ​யிலை மகாபலி சக்கர​வர்த்தி கட்டியதாக புராணச் செய்திகள் தெரிவிக்​கின்றன. இதே ஊரில் ஈசனும் ‘கண்​டீஸ்​வரர்’ என்ற பெயரில் கோயில் கொண்​டார். கண்டீஸ்​வரர் கோயி​லில் சரஸ்வதி தேவி​யுடன் பிரம்​மதேவர் (நான்​முகன்) அருள்​பாலிக்​கிறார். பிரம்​மதேவருக்கு எங்கும் கோயில் கிடை​யாது என்ப​தால் இத்தலத்​திலேயே தனிசந்​நி​தி​யில் அருள்​பாலிக்​கிறார்.

தாமரை தடாகங்கள் நிறைந்து காணப்​பட்​ட​தால் ‘கமலாரண்​யம்’ என்றும், மும்​மூர்த்தி​களுக்​கும் கோயில் அமைந்து உள்ள​தால் ‘திரிமூர்த்தி க்ஷேத்​ரம்’ என்றும், தலத்தை நினைத்​தவுடனேயே செய்த பாபங்கள் அனைத்​தும் கழிவ​தால் ‘கண்டன க்ஷேத்​ரம்’ என்றும் இவ்வூர் பெயர் பெற்றது.

இத்தல பெரு​மாள் மீது அளவு கடந்த பக்தி கொண்ட நாராயண தீர்த்​தர், இத்தலத்​துக்கு அருகில் உள்ள திருப்​பூந்​துருத்​தி​யைச் சேர்ந்தவர். இவரது நூல் ‘கிருஷ்ண லீலா தரங்​கிணி’மிகவும் பிரசித்தி பெற்​றது. திரு​மங்​கை​யாழ்​வார் இத்தலப் பெரு​மாளை தனது பாசுரத்​தில் ரங்கம் பெரு​மாள், காஞ்​சிபுரம் பெரு​மாள், கோயிலடி பெரு​மாளுடன் ஒப்பிட்டு பாடி​யுள்ளது சிறப்பு. இத்தல பெரு​மாள் கமலாக்​ருதி விமானத்​தின் கீழ் இருந்து கிழக்கு நோக்கி நின்ற கோலத்​தில் அருள்​பாலிக்​கிறார். அகத்திய முனிவர் இத்தலத்​தில் வழிபாடு செய்​துள்ளார்.

இந்த திரிமூர்த்தி தலத்​தைப் பற்றிய தகவல்களை பிரம்​மாண்ட புராணத்​தில் எட்டு அத்தி​யா​யங்​களி​லும், திரு​மங்​கை​யாழ்​வார் பாசுரத்​தி​லும், திரு​முறை​களி​லும், பிள்ளை பெரு​மாள் அய்யங்​கார் அந்தா​தி​யிலும் காணலாம். பங்குனி பிரம்​மோற்​சவம், ஐப்பசி பவித்​ரோற்​சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீப தினங்​களில் சிறப்பு பூஜைகள், ஆராதனை​கள், பல வாகனங்​களில் எழுந்தருளி சுவாமி வீதி​யுலா நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மும்​மூர்த்தி​களை​யும் தரிசித்து அருள்​பெறுவர்.

ஆண்டு​தோறும் பங்குனி பெரு​விழா 19 நாட்கள் கொண்​டாடப்​படும். விழா​வில் கருட சேவை, தேர்த் திரு​விழா, திருக்​கல்யாண வைபவம் நடைபெறும். ஈசனுக்கே தோஷம் போக்கிய தலமாதலால், இத்தல பெரு​மாளை வழிபட்​டால் அனைத்து தோஷங்​களும் நீங்​கும் என்பது ஐதீகம். கல்வி கேள்வி​களில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்​டும். பில்லி, சூனி​யம், ஏவல் ஆகிய​வற்​றால் பா​தி​க்கப்பட்டவர்கள் வந்து இத்தலத்தில் வழிபட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

அமைவிடம்: திருச்சி - திருவையாறு சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in