சிங்க குகையில் உயிர் பிழைத்த தானியேல்

சிங்க குகையில் உயிர் பிழைத்த தானியேல்
Updated on
2 min read

முன்னொரு காலத்தில் தரியு என்பவன் மேதிய பாரசீக பேரரசின் அரசனானான். அவன் தன்னுடைய ராஜ்ஜியம் முழுவதும் வரி வசூல் செய்வதை கண்காணிக்க மூன்று மேற்பார்வையாளர்களை நியமித்தான். இம்மூவருள் தானியேலும் ஒருவர். இவர் தம் கடவுளை உண்மையாக வணங்கியதால், மற்ற மேற்பார்வையாளர்களை விட சிறந்து விளங்கினார். தன் அரசின் முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம் என அரசன் எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனால் மற்ற மேற்பார்வையாளர்கள், அரசைக் கண்காணிப்பதில் தானியேலின்மீது குற்றம்சாட்ட நினைத் தார்கள். அவர் நேர்மையாய் நடந்து கொண்டதால், அவரிடத்தில் குற்றம் சாட்டுவதற்குரிய எந்தத் தவறையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! அப்பொழுது அவர்கள், “இந்தத் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் தவிர வேறெதிலும் அவர்மீது குற்றம் காணமுடியாது” என்றார்கள்.

எனவே, இந்த மேற்பார்வையாளர் தங்களுக்குள் கூடிப்பேசி அரசனிடம் வந்து, அதிகாரிகள், அமைச்சர், ஆளுநர் ஆகிய நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்துக் கூறுவது: முப்பது நாள் வரையில் அரசராகிய உம்மைத்தவிர வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ வேண்டுதல் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றித் தடையுத்தரவு போடவேண்டும். அவ்வாறே தரியு அரசன் சட்டத்தில் கையொப்பமிட்டுத் தடையுத்தரவு பிறப்பித்தான்.

தானியேல் இந்தச் சட்டத்தை அறிந்தும், தமது வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக மன்றாடி அவருக்கு நன்றி செலுத்தினார். முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். உடனே அரசனிடம் புகார் அளித்தார்கள்.

அரசனோ இதைக் கேட்டு மிகவும் மனம் வருந்தி, தானியேலைக் காப்பாற்ற உறுதிகொண்டு, அன்று மாலைவரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான். ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே திட்டமிட்டபடி, அரசனிடம் வந்து, “அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்” என்றனர்.

அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டுவரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார்.அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றான். அவர்கள் ஒரு பெரிய கல்லைப் புரட்டிக் கொண்டுவந்து குகையின் வாசலை அடைத்தார்கள்.

பின்னர் அரசன் அரண்மனைக்குத் திரும்பிச்சென்று, அன்றிரவு முழுவதும் உணவோ, உறக்கமோ கொள்ளவில்லை. வேறு எந்தக் களியாட்டத்திலும் ஈடுபடவில்லை. பொழுது விடிந்தவுடன், அவன் எழுந்து சிங்கக் குகைக்கு வேகமாக சென்றான்.

தானியேல் இருந்த குகையருகில் வந்து துயரக் குரலில், “தானியேல்! என்றுமுள்ள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னைச் சிங்கங்களினின்று விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டான். அதற்குத் தானியேல், “அரசரே! என் கடவுள் தம் தூதரை அனுப்பிச் சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார்.

அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை. ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே” என்று சொன்னார். அரசன் மிகவும் மனம் மகிழ்ந்து, உடனே தானியேலைக் குகையிலிருந்து விடுவிக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறே தானியேலைக் குகையிலிருந்து வெளியே தூக்கினார்கள். அவர் தம் கடவுளை உறுதியாக நம்பினதால், அவருக்கு யாதொரு தீங்கும் நேரிடவில்லை.

பிறகு அரசனது கட்டளைக்கிணங்க, தானியேலைக் குற்றம் சாட்டியவர்கள் இழுத்துக் கொண்டுவரப்பட்டனர். அவர்களும் அவர்களுடைய மனைவி, மக்களும் சிங்கக் குகையினுள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் குகையின் அடித்தளத்தை அடையும் முன்னே சிங்கங்கள் அவர்களைக் கவ்விப் பிடித்து, அவர்களுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிட்டன. அப்பொழுது தரியு அரசன் நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவர்க்கும் நாட்டினர்க்கும் மொழியினர்க்கும் ஓர் அறிக்கை விடுத்தான்.

“உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள். அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார். அவரது ஆட்சி என்றும் அழிவற்றது.

அவரது அரசுரிமைக்கு முடிவே இராது. தானியேலைச் சிங்கங்களின் பிடியினின்று காப்பாற்றியவர் அவரே. அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!” என்று அறிவித்தான்.

- merchikannan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in