

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுடன் வீரத்தமிழன்.
சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள சின்னகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் வீரத்தமிழன் (42). இவர் கடந்த 10 ஆண்டுகளாக 10 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
இவர் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் வழிகாட்டுதலில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து, அரிசி ரகங்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகிறார்.
கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், சீரக சம்பா, காட்டுயானம் போன்ற மருத்துவ குணம் மிக்க நெல் ரகங்களை பயிர் செய்கிறார். சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் உள்ள நுகர்வோருக்கு கூட நேரடியாக அரிசியாக விற்பனை செய்கிறார். மேலும், இந்த பாரம்பரிய அரிசி ரகங்களை கஞ்சி மிக்ஸ், இடியப்ப மாவு, புட்டு மாவு என மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாகவும் மாற்றி விற்பனை செய்கிறார்.