

தேனீ வளர்ப்புப் பெட்டி. ( உள்படம்) தேனடையுடன் மாதவன்.
படிப்பு முடித்தவுடன் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் பொதுவான கனவாக இருக்கிறது.
ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பட்டதாரி இளைஞர், தன் குடும்பத் தொழிலான விவசாயத்துக்குப் பக்கபலமாக இருப்பதோடு, பொதுமக்களுக்கு நஞ்சில்லா காய்கறிகளை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தேனீ வளர்ப்பைக் கையில் எடுத்துள்ளார்.
மாற்றம் தந்த மலையடிபுதூர் பயணம்
தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மாதவன் (25). பி.எஸ்சி. பட்டதாரியான இவர், விவசாயத்தின் மீதுள்ள பற்றால் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று மாற்று விவசாய முறைகளைத் தேடி வந்தார்.
மாதவனின் பெற்றோர் காய்கறி சாகுபடி செய்து, தினமும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு வரும் மக்கள் பூச்சிக்கொல்லி இல்லாத தரமான காய்கறிகளையே விரும்பிக் கேட்கின்றனர்.
மக்களின் இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவும், அதே நேரத்தில் உழைப்புக்கேற்ற மகசூலைப் பெறவும் வழி தேடியபோதுதான் மாதவனுக்கு ‘தேனீ வளர்ப்பு’ பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.