

இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முத்தமிழ்.
புதுச்சேரி வில்லியனூர் ஆரியப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ் (38). கடந்த 15 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், நம்மாழ்வாரின் உரைகளைக் கேட்டு, 4 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.
இவரது பண்ணையில் உற்பத்தி ஆகும் பாரம்பரிய அரிசி நேரடியாக பயனாளிகளுக்கே சென்று சேர்கிறது. இடைத்தரகர் இல்லாத இந்த வர்த்தகத்தில் விவசாயி - பயனாளி ஆகிய இரு தரப்புக்குமே லாபம் கிடைக்கிறது என்கிறார் அவர்.
தன்னுடைய விவசாயம் பற்றி அவர் கூறியதாவது: நம்மாழ்வாரின் உரைகளைக் கேட்டு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முழுமையான இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டேன். இயற்கை விவசாய முறையில், பூச்சித் தாக்குதலை எதிர் கொள்ள முடியாது என்றெல்லாம் அச்சமூட்டினர்.
ஆனால், பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும்போது பூச்சித்தாக்குதல் அவ்வளவாக இருக்காது என்பதை எனது அனுபவத்தில் தெரிந்துகொண்டேன். இப்போது, கருப்பு கவுனி, சீரக சம்பா, தூய மல்லி, சிவன் சம்பா, குதிரைவாலி, பூங்கார், ரத்தசாலி, கருங்குறுவை, குள்ளக்கார் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களை மாற்றி, மாற்றி சாகுபடி செய்து வருகிறேன்.