

ஆடு வளர்ப்பவர்களுக்கு சவாலாக இருப்பதே தீவனம்தான். ஆடுகளுக்கு சத்தான தீவனம் கிடைப்பதோடு, விலை குறைவாகவும் இருக்க வேண்டும். ஆனால், மேய்ச்சல் நிலங்கள் குறைந்துவிட்ட சூழலில், அதிகக் காசு கொடுத்து தீவனம் வாங்காமல், ஆடு வளர்ப்பு சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ஊர்புறப் பகுதிகளில், மேய்ச்சலுக்கு உதவிய மேய்க்கால் புறம்போக்கு உள்ளிட்ட பொதுநிலங்கள் குறைந்துவிட்டன. இதனால் இயற்கையான மேய்ச்சலை இழந்து, கால்நடைகளை பட்டிகளில் அடைத்துவைத்து வளர்க்கும் முறை பெருகி வருகிறது. இந்த மாற்றங்களின் கூட்டு விளைவாக, கால்நடை வளர்ப்பில் தீவனச் செலவு பெரிதும் உயர்ந்துள்ளது.
நிலங்களிலிருந்து கிடைத்து வந்த தீவனங்களின் குறைவு மற்றும் ஊட்டச்சத்து சமநிலையின்மை போன்ற காரணங்களால் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுவதோடு, பால் மற்றும் இறைச்சி உற்பத்தியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், சந்தையில் விற்கப்படும் தீவனங்களை அதிக விலை கொடுத்து வாங்க முடிந்தவர்களால் மட்டுமே, கால்நடைகளை வளர்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.