

தோட்டத்துக்கு வருகை தந்த மாணவர்கள்.
இன்றைய நவீன காலகட்டத்தில் மனித குலத்தைப் அச்சுறுத்தும் பெரும்பாலான நோய்களுக்கு, ரசாயனம் கலந்த காய்கறிகளே முதன்மையான காரணியாக அமைகின்றன. சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் செயற்கை உரங்களால் விளைவிக்கப்படுபவை.
இந்தச் சூழலில், நஞ்சில்லாத உணவை மக்களுக்கு வழங்கவும், சீரழிந்து வரும் மண் வளத்தைக் காக்கவும் இயற்கை விவசாயம் மட்டுமே ஒரே தீர்வு என்பதைத் தனது பண்ணை மூலம் நிரூபித்துக் காட்டி வருகிறார் திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி. முத்துக்குமார்.
பசுமைப் புரட்சி
திருப்பூர் - சின்னக்காளிபாளையம் சாலையில் அமைந்துள்ள ‘குறிச்சி இயற்கை பண்ணை’ கடந்த நான்கு ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தின் முகவரியாகச் செயல்பட்டு வருகிறது.
இங்கு ரசாயன உரங்களுக்குப் பதிலாக மக்கிய உரம், மாட்டுச் சாணம், மாட்டுக் கோமியம், ஆட்டுப் புழுக்கை, மீன்கழிவு, நாட்டுச் சர்க்கரை மற்றும் பஞ்சகவ்யா ஆகிய இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டே உரங்கள் தயாரித்துப் பயன்படுத்தப்படுகின்றன.
60 ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, காய்கறிகள், பழங்கள், தேனீ வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு என ஒருங்கிணைந்த முறையில் பண்ணை பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், 1,000 தென்னை மரங்களுடன் தலா 15,000 மலைவேம்பு மற்றும் சந்தன மரங்களும் வளர்க்கப்படுகின்றன.