

குறைந்த தண்ணீர் மற்றும் பராமரிப்பில் மேட்டுப்பகுதி நிலங்களில் அதிக லாபம் தரும் ஒரு பயிராக எலுமிச்சை சாகுபடி விளங்குகிறது. செயற்கை மருந்து மற்றும் உரங்களின் விலைகள் அதிகரித்து வரும் இந்நாளில், இயற்கை முறை எலுமிச்சை சாகுபடியில் சரியான உத்திகளைக் கையாண்டால், சிறப்பான மகசூல் மற்றும் லாபத்தை பெற முடியும்.
சாதித்தவர்கள்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், குப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், இயற்கை விவசாய முறையில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறார். அவர் மீன் அமிலம், புண்ணாக்கு வகைகள் மற்றும் எருக்கு கரைசல் ஆகியவற்றைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை பயிர்கள் மீது தெளித்தும், தரைவழியாகப் பாசன நீரில் கலந்து ஊற்றியும் வந்துள்ளார்.
இதனால், ஒரு எலுமிச்சை காய் 85 கிராமுக்கு மேலாகக் காய்த்தது. முக்கியமாக, நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இல்லாத மரங்களை கடந்த இரண்டு வருடங்களாக அவரால் பராமரிக்க முடிந்தது. இயற்கை இடுபொருள்கள் கொடுப்பதால் எலுமிச்சைப் பழங்கள் மற்றும் மரத்தின் ஆரோக்கியம் சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
மலேசிய நாட்டின் கோலாலம்பூர், பேன்டிங் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், இயற்கை வழித் திரவங்களுடன் உயிர் கரைசல்களான சூடோமோனாஸ், வெர்டிசீலியம் லக்கானி போன்ற திரவங்களை அழுகல் மற்றும் பூச்சி எதிர்ப்புக்கு எதிராகத் தெளித்து வந்தார்.
இதனால், எந்தவிதமான கழிவும் இல்லாத தரமான காய்களைப் பெற முடிந்தது. முக்கியமாக எருக்குக் கரைசல், புண்ணாக்குக் கரைசல் மற்றும் பஞ்சகவ்யாவை 15 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து தெளித்து வந்துள்ளார்.