

பருவநிலை மாற்ற சவால்களுக்கு மத்தியிலும், தண்ணீரை மிகச்சிறந்த முறையில் சேமித்து அதிக பரப்பளவில் சாகுபடி செய்யும் நோக்கில், நீலகிரி மாவட்ட மலைக்காய்கறி விவசாயிகள் மத்தியில் நுண்ணீர் பாசன முறை அண்மைக்காலமாக அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரமாக தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது. வழக்கமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் மூலம் ஆண்டின் ஆறு மாதங்களுக்கு இங்கு தடையின்றி மழைப்பொழிவு கிடைக்கும். ஆனால், அண்மைக்கால புவி வெப்பமயமாதல் மற்றும் தீவிர பருவநிலை மாற்றம் காரணமாக, பருவமழை போதிய நேரத்தில் பெய்வதில்லை.
சில நேரங்களில் அதீத மழையும், சில சமயங்களில் கடுமையான வறட்சியும் நிலவுகிறது. இத்தகைய சூழலில், நீர் ஆதாரங்கள் உள்ள பகுதிகளில் இருந்து மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுத்து விளைநிலங்களுக்குப் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.
பாரம்பரிய தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும்போது, சரிவுப் பாங்கான நிலங்களில் நீர் நிலத்துக்குள் இறங்காமல், தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடி வீணாகிறது.
விவசாயிகளின் வரப்பிரசாதம்
தற்போதைய காலகட்டத்தில் குறைந்த தண்ணீரைத் திறம்படப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் அவசியமாகின்றன. அந்த வகையில், தோட்டக்கலைத் துறை அறிமுகப்படுத்தியுள்ள நுண்ணீர் பாசனத் திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.