

காவேரி பூவன் கன்றுகளை ஆராய்ச்சித் திடல் வளர்ப்புக்காக விவசாயிகளுக்கு வழங்கிய இயக்குநர் ஆர்.செல்வராஜன்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைப்படி, 1993ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் போதாவூரில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (National Research Center for Banana – NRCB) சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. மேலும், 90 ஏக்கர் பரப்பளவில் மையத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி பண்ணை வயல் உள்ளது. இங்கு 520 வாழை ரகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பணப் பயிரான வாழையின் மகசூல் பெருக்கம், ஊட்டச்சத்து பெருக்கம் தொடர்பாக இந்த மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வாழையில் பல்வேறு ரகங்கள் இருந்தாலும் 25 ரகங்கள் மட்டுமே உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை 9.2 லட்சம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
ஜி-9 ரக வாழை 55 சதவீதமும், பூவன் ரகம் 17 சதவீதமும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூவன் வாழை நமது பாரம்பரிய கலாச்சார, பண்பாடு நிகழ்வுகளிலும், விழாக்களிலும் முக்கிய இடம் பிடிக்கிறது. தமிழகத்தில் மண், தட்பவெப்ப நிலையானது பூவன் வாழை சாகுபடிக்கு சாதகமாக இருப்பதால் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.
பூவன் ரகத்தில் மட்டும்தான் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு ஆகிய 3 சுவையும் இருக்கும். திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகள், ஓட்டல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இதன் இலைகள் கிழியாது. வாழைக் கன்றுகள் அதிகம் வரும். கற்பூரவள்ளி 14 மாதத்தில்தான் அறுவடைக்கு தயாராகும். ஆனால், பூவன் 8 மாதத்திலேயே அறுவடைக்கு தயராகிவிடும்.
இதனால் டெல்டா விவசாயிகளின் முதல் தேர்வாக பூவன் ரகம் உள்ளது. பூவன் ரக வாழையில் பல நூறு ஆண்டுகளாக கருங்கோடு வரித்தேமல் எனப்படும் வைரஸ் நோய் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் அதிகளவு மகசூல் இழப்பு மற்றும் வாழை இலையின் தரம் பாதிக்கப்படுகிறது. இந்த நோய் தாக்கிய மரத்தின் இலைகளில் நீள வாக்கில் பொன்மஞ்சள் நிற கோடுகள் தோன்றி பின்னர் கருங்கோடுகளாகமாறும்.