

மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு விளையும் என்ற நீண்டகால நம்பிக்கையைத் தகர்த்து, புதுச்சேரியின் தகிக்கும் சமவெளியில் மிளகுக்கொடிகளைப் படரவிட்டு வெற்றியும் கண்டு வருகிறார் புதுச்சேரி பாகூர் அடுத்த அரங்கனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆதி. திருஞானமூர்த்தி. ரசாயன உரக்கடை வைத்திருந்த ஒருவர், இன்று இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் முன்னோடியாக மாறியிருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
மனமாற்றத்தைத் தந்த உரக்கடை
இயற்கை விவசாயத்தின் மீது திருஞானமூர்த்திக்கு ஆர்வம் ஏற்படக் காரணமே அவர் முன்பு நடத்தி வந்த உரக்கடைதான். அங்கு உரம் வாங்க வரும் விவசாயிகள், பெரும் முதலீடு செய்தும் போதிய லாபமின்றித் தவிப்பதையும், கடன் சுமையால் அவர்கள் படும் வேதனையையும் நேரடியாகக் கண்டபோதுதான் அவருக்குள் அந்த மாற்றம் நிகழ்ந்தது.
விவசாயிகளுக்கு நிலையான லாபம் கிடைக்க வேண்டுமானால், செலவில்லாத இயற்கை விவசாயமே ஒரே வழி என்பதை உணர்ந்த அவர், உரக்கடையை மூடிவிட்டுத் தனது சொந்த நிலத்தில் களமிறங்கினார்.