

சேலத்தில் நடைபெறும் மரபுச் சந்தை. (உள்படம்) பாரம்பரிய மரபு விதை மூலம் உற்பத்தி செய்த பூசணிக்காயுடன் அரவிந்தன்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ப.அரவிந்தன், இயற்கை விவசாயம் மற்றும் மரபு விதைகளை மீட்டெடுப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறார்.
பருவநிலை மாற்றம், போதிய மழையின்மை, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை போன்ற காரணங்களால் பல விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் சூழல் நிலவுகிறது.
இத்தகைய சவாலான காலகட்டத்திலும், இயற்கை விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற முடியும் என நிரூபித்து வருகிறார் அரவிந்தன். நாமக்கல்லில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் பங்கேற்ற நேரத்தில், தனது அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்:
பொறியியல் பணியிலிருந்து மண் நோக்கி...
நான் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் ‘குவாலிட்டி அஷ்யூரன்ஸ்’ (QA) பொறியாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். கொரோனா காலத்தில் ஏற்பட்ட சில சொந்த காரணங்களால் வேலையை விட்டு விலக நேரிட்டது.