

பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி செய்யும் இளம் விவசாயி அரவிந்த் விஜய்.
‘தென்கொங்கு சீமை’ என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான பொள்ளாச்சியில், ஒரு காலத்தில் நிலக்கடலை, பருத்தி, கம்பு மற்றும் சோளம் ஆகியவையே பிரதான பயிர்களாக இருந்தன.
ஆற்றுப்பாசனம் மிகுந்த ஆனைமலை பழைய ஆயக்கட்டு பகுதிகளில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. 1960களுக்குப் பிறகு ஆழியாறு அணை கட்டப்பட்டதால் கிடைத்த நீர்வசதியைப் பயன்படுத்தி, இப்பகுதி விவசாயிகள் நீண்டகாலப் பயிரான தென்னை சாகுபடிக்கு மாறினர். பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டதால், பொள்ளாச்சி ‘தென்னை நகரம்’ என்ற பெருமையைப் பெற்றது.
தென்னை விவசாயிகளின் தற்போதைய சவால்கள்
கடந்த சில ஆண்டுகளாகப் பொள்ளாச்சி தென்னை விவசாயிகள் கடும் சவால்களைச் சந்தித்து வருகின்றனர். முன்பு தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சிக்காகப் போராடிய விவசாயிகள், தற்போது தென்னை மரங்களைக் காப்பாற்றவே திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெள்ளை ஈ தாக்குதல், கூன் வண்டு,
கேரளா வாடல் நோய் மற்றும் கடும் வறட்சி ஆகியவற்றால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மனவேதனையுடன் தென்னை மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, மாற்றுப் பயிர்களை நோக்கி சில விவசாயிகள் நகரத் தொடங்கியுள்ளனர்.
வேளாண் பட்டதாரியின் நவீன முயற்சி
இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த பொன்னாயூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் விஜய் என்ற இளம் வேளாண் பட்டதாரி, தென்னைக்கு மாற்றாகப் பசுமைக்குடில் (Green house) விவசாயத்தைத் தொடங்கிப் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை அகற்றிவிட்டு, தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.45 லட்சம் முதலீட்டில் ‘பாலி ஹவுஸ்’ எனப்படும் உயர்தொழில்நுட்ப பசுமைக்குடில் அமைத்து, அரசின் மானியத்துடன் வெள்ளரி சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.