

அரசம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள். (உள்படம்: ஜே.கென்னடி)
தென்னங்கன்று வளர்ப்பது என்பது மிகவும் சவாலான முறை. நல்ல தாய் மரத்திலிருந்து விளைந்த திடமான காயை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சரியான மண் வளத்தை அளிக்க வேண்டும். அதோடு, பருவத்துக்கு ஏற்ப தேவையான உரம், நீர், பூச்சி / நோய் மேலாண்மை என பக்குவமாக கவனித்து வளர்த்தால் மட்டுமே தென்னங்கன்று நமக்கு முழு பலன் அளிக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரில் 40 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இம்மரங்களில் ஆண்டுக்கு சுமார் 5 கோடி தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தென்னை மரங்களை நம்பி தேங்காய் மண்டிகளும், துடைப்பம், நார் தயாரிக்கும் சிறுதொழில்களும், கொப்பரை, தென்னை ஓடு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை வளர்ப்பு மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் இவ்வளவு பேர் ஈடுபட்டிருக்கும் நிலையில், அரசம்பட்டி தென்னங்கன்று உற்பத்தி தனிக்கவனம் பெற்றிருக்கிறது.