

தேனீ வளர்ப்புப் பெட்டி உள்ள தோட்டத்தில் விவேகானந்தன்
தேனீ வளர்ப்பில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்டி சாதனை படைத்து வருகிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த முற்போக்கு விவசாயி விவேகானந்தன்.
அதே வேளையில், அழிந்து வரும் தேனீ இனங்களைப் பாதுகாக்கவும், இத்தொழிலை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தேனீ வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தந்தையின் வழியில்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த திவான்சா புதூரைச் சேர்ந்த விவேகானந்தன் (40), பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.
எனினும், கடந்த 15 ஆண்டுகளாகத் தேனீ வளர்ப்பில் முழுமையாக ஈடுபட்டு முத்திரை பதித்து வருகிறார். இவரது தந்தை அப்புசாமி, இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவிலிருந்து வெறும் 10 தேனீ பெட்டிகளை வாங்கி வந்து இத்தொழிலைத் தொடங்கினார்.
தந்தையின் வழியைப் பின்பற்றி இத்தொழிலைக் கையில் எடுத்த விவேகானந்தன், இன்று அதனைப் பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளார். தற்போது அவரிடம் 1200 இந்திய நாட்டுத் தேனீ பெட்டிகளும், 150 இத்தாலியத் தேனீ பெட்டிகளும், 200 இந்தியக் கொசுத் தேனீ பெட்டிகளும் உள்ளன.
ரூ.20 லட்சம் நிகர லாபம்
பொள்ளாச்சியில் சிறிய அளவில் தொடங்கிய இவருடைய தேனீ வளர்ப்புத் தொழில், இன்று தமிழகத்தின் ஒட்டன்சத்திரம், மாதேஸ்வரன் மலை, சத்தியமங்கலம் மற்றும் கேரளாவின் அட்டப்பாடி, பாலக்காடு வரை பரந்து விரிந்துள்ளது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள இயற்கை விவசாயிகளின் விளைநிலங்களில் தேனீ பெட்டிகளை வைத்து, மூன்று பணியாளர்களின் உதவியோடு தேனீ வளர்ப்பை விவேகானந்தன் மேற்கொண்டு வருகிறார்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்தமான தேன், பல்வேறு விழாக்களின் விற்பனை அரங்குகள், விவசாயக் கண்காட்சிகள், இயற்கைச் சந்தைகள், நுகர்வோர் அங்காடிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஓராண்டுக்குச் சராசரியாக 15 ஆயிரம் கிலோ வரை தேன் அறுவடை செய்யப்பட்டு வந்தது.