

கல்லூரியில் பாடம் நடத்தும்போது வகுப்பில் “டூர் போகலாம்” என்றேன். மாணவர்கள் சந்தோஷத்தில் குதித்தார்கள்.”யாரும் போகாத இடத்துக்குப் போகலாம்” என்றேன். “சார் லைப்ரரிக்குப் போகலாம் சார்.அங்கதான் யாரும் போறதில்லை” என்றான் ஒரு மாணவன் என்று பேராசிரியர் ஞானசம்பந்தம் நகைச்சுவையாகச் சொல்வார்.
இன்று பல்வேறு பிரிவினர் தங்களின் வீடுகளில் நூலகங்களை அமைத்து வருகின்றனர். அரசு நூலகங்களும் வாசகர்களால் நிரம்பி வழிகின்றன.தனியார் நூலகங்களும் ஆரம்பிக்கப்படுகின்றன.
சமீபத்தில் ஒரு புத்தகக் கடையில் மாணவிகள் கூடியிருந்தனர். ஒவ்வொரு மாணவரும் நூறு ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை நூலகத்துக்கு வாங்கித் தரவேண்டும் எனக் கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகத் தெரிவித்தனர்.
கல்விக் கட்டணத்தில் நூலகக் கட்டணத்தை வசூலித்தாலும் இதுபோலவும் புத்தகங்களை வாங்கிக் கையெழுத்து போடாமல் மாணவிகளிடம் வசூலிக்கும் முறை கல்லூரிகளில் பரவி வருகிறது. சமீபத்தில் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் எனது உறவினர் பெண் இதே காரணத்தைச் சொல்லி நான் எழுதிய ஒரு புத்தகத்தைக் கேட்டாள். ஐம்பது ரூபாய் புத்தகம் ஒன்று கையைவிட்டுப் போனது.
கல்வி நிலையங்கள் இப்படி இரவல் வாங்கி நூல்நிலையங்கள் அமைப்பதை என்னவென்று சொல்வது? எழுத்தாளர்களின் புத்தகங்கள் மக்களிடம் செல்ல நல்ல உபாயம்தான் போங்கள்.