காசு..பணம்..துட்டு..மணி..மணி

காசு..பணம்..துட்டு..மணி..மணி
Updated on
1 min read

ஒரு தம்பிடி கூடத் தர மாட்டேன், அவன் ஒரு சல்லிப் பயல் இப்படின்னு எல்லாம் பேச்சு வழக்குல, இன்றும் மக்கள் பேசுகிறார்கள்.

‘சல்லிப் பய', ‘சல்லித்தனம்'ங்றது எல்லாம், சின்னத்தனம் அல்லது சில்லறைத்தனத்தைக் குறிக்குது. இதுல இருந்தே நாம தெரிஞ்சி கிடலாம் ‘சல்லி'ங்றது ஒரு சிறு நாணயம்ன்னு.

வராகன்

ஒரு த‌ம்பிடிகூட‌க் குடுக்க‌ மாட்டேன்னா, ஒரு கைப்பிடி அல்ல‌து கொஞ்ச‌மும் த‌ர‌ மாட்டேன்னு இப்போ புரிஞ்சுக்கிறோம். ஆனா, த‌ம்பிடிங்ற‌தும் ஒரு சிறு நாண‌ய‌ம்தான்.

ப‌ழ‌ங்கால‌த்துல‌ ந‌ம்ம‌ பெரிய‌வ‌ங்க‌ செப்புக் காசு, வெள்ளிக்காசு, பொற்காசுன்னும் பொழ‌ங்கிட்டு வ‌ந்து இருக்காங்க‌. வராகன், மோஹர்ங்ற மொஹரா, பகோடா எல்லாம் த‌ங்க‌க் காசுக‌ தான். இதுல வராகன்ங்றது தமிழ் மொழில, மத்தது வட மொழில.

டப்பு

ப‌ல‌ பேர‌ர‌சு, சிற்ற‌ர‌சு கொண்ட‌து தானே இந்தியா. அங்க‌ங்க‌ ஒவ்வொரு வ‌கையான‌ நாண‌ய‌ப் பொழ‌க்க‌ம் இருந்து இருக்கு. பின்னாடி வ‌ந்த‌வ‌ங்க‌, அதை எல்லாம் ஒருங்கிணைச்சாங்க‌. அப்ப‌டித்தான், செப்புக் காசை, ட‌ப்பு (dubbu) ன்னு சொன்னான் ட‌ச்சுக்கார‌ன்.

இப்படி ஏற்கனவே புழங்கிட்டு இருந்த ‘பணம்', 'துட்டு', ‘காசு', ‘தம்பிடி', ‘சல்லி'ங்ற சிறு நாணயங்கள் காலப்போக்கில் வட இந்திய அரசர் ஷெர்ஷா சூரி 1540-ல் அறிவித்த அந்தக் கால ரூபாயோடு இணைந்தன.

அந்தக் கால கணக்கு

அந்தக் கால 1 ரூபாய்க்கு 192 தம்பிடிகள். 12 தம்பிடி = 1 அணா, 16 அணா = 1 ரூபாய்

ஒரு அணா - ஆறு பைசா

ஒரு பணம் - ரெண்டு அணா

ஒரு அணா - மூணு துட்டு

ஒரு துட்டு - ரெண்டு பைசா

ஒரு சல்லி - கால் துட்டு

காலணா - முக்கால் துட்டு

அரையணா - ஒன்றரைத் துட்டு

ஒரு அணா - நான்கு காலணா (அ) மாகாணி ரூபாய்

இரண்டு அணா - அரைக்கால் ரூபாய்

நாலணா - கால் ரூபாய்

எட்டு அணா - அரை ரூபாய்

கழஞ்சு - ஒரு பொற்காசு (வராகன்)

வராகன் எடை - 3.63 கிராம்

சக்கரம் - ஒரு வெள்ளிக் காசு

பதினாறு சக்கரம் - ஒரு வராகன்

சக்கரம் - பதினாறு காசு (செப்பு) என மக்கள் பலவிதமாக நாணயக் கணக்கை கையாண்டனர். இன்று நாம் கையாளும் ரூபாய் கணக்கு 1957 முதல் நடைமுறைக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in