பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம்- மூத்த பேராசிரியர்கள் தலைமையில் 9 குழுக்கள்

பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம்- மூத்த பேராசிரியர்கள் தலைமையில் 9 குழுக்கள்
Updated on
1 min read

தமிழக பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் உள்ள வெவ்வேறு பாடத்திட்டங் களை ஆராய மூத்த பேராசிரியர்கள் தலைமையில் 9 முதன்மைக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

மாணவர்களின் பிரச்சினை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல்கலைக்கழங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்து அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர் பேராசிரியர் கரு.நாகராஜன் “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:-

ஒரே கல்வித்தரம்

தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் பாடப்பிரிவுகளின் தரத்தை ஒருங் கிணைக்கவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு பல் கலைக்கழகத்திலிருந்து மற்றொரு பல்கலைக்கழகத்துக்கு சென்று படிக்கவும், பாடம் நடத்தவும் இந்த ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (இன்டக்கிரேடட் சிலபஸ்) மிகவும் உதவிகரமாக இருக்கும்.

ஒவ்வொரு முறையும் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பின் போது மாணவர்கள் சமமான பாடத்திட்டம் என்பதை குறிப்பிடும் ஈக்குவேலன்ஸ் என்ற சான்றுக்காக கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களும், மாநில உயர்கல்வி கவுன்சில் அலுவலகத்துக்கும் டி.ஆர்.பி., டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையங் களுக்கும் அலைந்து கடைசியாக நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

உதாரணத்துக்கு, தன்னாட்சிக் கல்லூரி ஒன்று எம்.ஏ. வரலாறு என்ற பாடத்திட்டத்தில் சர்வதேச வரலாறை முக்கியப் பாடமாக கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இங்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள் இந்திய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கல்லூரிகளில் உள்ள வரலாற்று மாணவர்களுக்கு பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த திட்டத்தை செயல் படுத்தப்படுவதற்காக கலை-அறிவியல் படிப்புகளுக்கு 8 முதன்மைக் குழுக்களும், கல்வியியல் படிப்புக்கு ஒரு குழுவும் விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரியில் உள்ள பாடத்திட்டத்தை ஆராய்வதற்காக அவற்றின் பாடத் திட்டத்தை கேட்டிருந்தோம்.

இதுவரை 80 சதவீத கல்வி நிறுவனங்கள் எங்களுக்கு பாடத்திட்டத்தை அனுப்பிவிட்டன. இந்த மாத இறுதிக்குள் பாடத்திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இதில் வெவ்வேறு பாடத்திட்டங்களை ஆராய்ந்து, பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்ட வங்கி ஒன்று உருவாக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in