

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்
கொல்கத்தா: ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்ட கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நேற்று மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்தபோஸ் ஆய்வு நடத்தினார்.
கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பங்கேற்றார். அப்போது மைதானத்தில் அவரை சரிவர காண முடியாததாலும், அவர் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் புறப்பட்டுச் சென்றதாலும் ரசிகர்கள் மைதானத்தில் இறங்கி ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இந்நிலையில் ரகளை நடந்த மைதானத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் வந்து ஆய்வு நடத்தினார். அவருடன் தலைமைச் செயலர் மனோஜ் பந்த் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
அப்போது ஆளுநர் கூறும்போது, “மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமுறைகளை அரசு கடைப்பிடிக்கவில்லை. இதுதொடர்பாக நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். சம்பவத்துக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். மேலும் நிகழ்ச்சிக்காக வசூலிக்கப்பட்ட டிக்கெட் தொகையை ரசிகர்களுக்கு உடனடியாக திருப்பித் தரவேண்டும்” என்றார்.