

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை, அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இன்று சந்தித்துப் பேசவுள்ளார்.
லயோனல் மெஸ்ஸி ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ளார். முதல் நாளில் கொல்கத்தா, ஹைதராபாத் நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி பங்கேற்றார். ஹைதரா பாத்திலுள்ள உப்பல் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் மெஸ்ஸி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நேற்றைய 2-ம் நாள் பயணத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கால் பந்து நட்சத்திரம் மெஸ்ஸி பங்கேற்றார். மெஸ்ஸியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இந்நிலையில் இன்று 3-ம் நாள் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் மெஸ்ஸி சந்தித்துப் பேசவுள்ளார்.
பிரதமர் மோடியின் டெல்லி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. காலை 10.45 மணிக்கு டெல்லி வரும் மெஸ்ஸி, நகரிலுள்ள ஒரு ஓட்டலில் நடைபெறும் ‘மீட் அன்ட் கிரீட்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் இந்தியாவுக்கான அர்ஜெண்டினா நாட்டின் தூதர் மரியானோ அகஸ்டின் கவுசினோவைச் சந்தித்துப் பேசுகிறார். அதற்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், முப்படைத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி ஆகியோரையும் மெஸ்ஸி சந்தித்து உரையாடவுள்ளார்.
பின்னர் மாலை 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானம் செல்லும் மெஸ்ஸிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் காட்சி கால்பந்துப் போட்டியில் அவர் பங்கேற்கிறார். பின்னர் அங்கு நடைபெறவுள்ள கால் பந்து முகாமில் 22 வீரர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இதைத் தொடர்ந்து கிரிக்கெட் மைதானத்துக்கு வரும் மெஸ்ஸிக்கு, 2 இந்திய கிரிக்கெட் வீரர்கள் பரிசளிக்க உள்ளனர். பின்னர் அவர்களுக்கு அர்ஜெண்டினா கால் பந்து அணியின் சீருடையை மெஸ்ஸி வழங்குவார். இதைத் தொடர்ந்து அவர் இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.