

உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு இப்போது ஓர் இந்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்தான் குணால் ஷா. வாட்ஸ்அப் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை செயல் அதிகாரியாக (குளோபல் சிஇஓ) ‘கிரெட்’ நிறுவனர் குணால் ஷாவை நியமித்துள்ளது மெட்டா நிறுவனம்.
1979-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பிறந்து, மும்பையில் வளர்ந்த குணால் ஷா, நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருந்த அவரது குடும்பம் ஒரு கட்டத்தில் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. இதனால், குடும்பத்துக்கு உதவுவதற்காக 15 வயதிலேயே சிறிய வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். இளம் வயதிலேயே வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்ட இந்த அனுபவம்தான், பின்னர் அவரது தொழில்முனைவோர் பயணத்துக்கான அடித்தளமாக அமைந்தது.
மும்பையிலுள்ள வில்சன் கல்லூரியில் தத்துவவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர் மேலாண்மைப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், நடைமுறை அனுபவமே அதிகம் கற்றுத் தரும் என்ற நம்பிக்கையால் எம்பிஏ படிப்பை முழுமையாக முடிக்காமல் வெளியேறினார்.
2009-ல் ‘பைசா பேக்’ (PaisaBack) என்ற நிறுவனத்தைத் தொடங்கிய குணால் ஷா, ஓர் ஆண்டுக்குப் பிறகு சாந்தீப் டாண்டனுடன் இணைந்து ‘ஃப்ரீ சார்ஜ்’ (FreeCharge) எனும் நிறுவனத்தை உருவாக்கினார். அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மொபைல் ரீசார்ஜ் சந்தையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் புதிய அணுகுமுறையை அவர் அறிமுகப்படுத்தினார்.
ஆன்லைன் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அதே மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்களை வழங்கிய ‘ஃப்ரீ சார்ஜ்’, குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றி, 2015-ல் ‘ஸ்நாப்டீல்’ (Snapdeal) நிறுவனம் ‘ஃப்ரீ சார்ஜ்’ நிறுவனத்தை சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்தியதன் மூலம் உச்சத்தை எட்டியது. அப்போது இந்திய ஸ்டார்ட்அப் உலகின் முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாக அது பார்க்கப்பட்டது.
‘ஃப்ரீ சார்ஜ்’ வெற்றிக்குப் பிறகு, 2018-ல் குணால் ஷா தொடங்கிய நிறுவனம்தான் ‘கிரெட்’ (CRED). பெரும்பாலான ஃபின்டெக் நிறுவனங்கள் அதிகமான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட நிலையில், நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட பயனர்களை மட்டும் மையப்படுத்தும் வித்தியாசமான அணுகுமுறையை ‘கிரெட்’ பின்பற்றியது.
கிரெடிட் கார்டு பில் கட்டணம் செலுத்துதல், முதலீடு மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்கும் இந்த நிறுவனம், அதன் தனித்துவமான வணிக மாதிரி மற்றும் விளம்பர உத்திகளால் விரைவில் கவனம் பெற்றது. குறிப்பாக, ராகுல் டிராவிட் நடித்த ‘இந்திராநகர் கா கூண்டா’ விளம்பரம் கிரெட் செயலியை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது.
இன்று சுமார் 1.5 கோடி பயனர்களைக் கொண்ட ‘கிரெட்’, இந்தியாவின் முக்கிய ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த மகத்தான எண்ணிக்கையை சாத்தியப்படுத்தியது அதன் நிறுவனர் குணால் ஷாவின் வணிக வியூகங்கள்.
தனது நிறுவனங்களைத் தாண்டி, இந்திய ஸ்டார்ட்அப் உலகின் செல்வாக்கு மிக்க முதலீட்டாளர்களில் ஒருவராகவும் குணால் ஷா அறியப்படுகிறார். Razorpay, Unacademy, CoinSwitch, Khatabook உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.
நுகர்வோர் நடத்தை, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புதிய வணிக உத்திகள் குறித்த அவரது கருத்துகள் தொழில்முனைவோர் வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. சந்தையில் வெற்றி பெற வேண்டுமெனில், ஏற்கெனவே உள்ள தயாரிப்புகளை விட குறிப்பிடத்தக்க அளவில் சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற அவரது ‘டெல்டா 4’ சிந்தனையும் கவனம் பெற்றது.
ஏன் ‘வாட்ஸ்அப்’புக்கு குணால் ஷா?
புதிய தயாரிப்புகளை உருவாக்கும் திறன், நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்த அனுபவம் ஆகியவை குணால் ஷாவை இந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவராக மாற்றியுள்ளதாக மெட்டா கருதுகிறது.
உலகளவில் மிகப் பெரிய பயனர் அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும், வாட்ஸ்அப் தனது வணிகத் தொடர்புகள், டிஜிட்டல் கட்டணச் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை மேலும் விரிவுபடுத்த முயன்று வருகிறது. இந்த அடுத்தகட்ட வளர்ச்சியை வழிநடத்தும் பொறுப்பே தற்போது குணால் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
15 வயதில் குடும்பத்துக்கு உதவ சிறிய வேலைகளைச் செய்த இளைஞர், இன்று உலகின் மிகப் பெரிய தகவல் தொடர்பு தளங்களில் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். குணால் ஷாவின் பயணம் ஒரு தனிநபரின் வெற்றிக் கதையாக மட்டுமல்ல, இந்தியாவில் உருவாகும் நிறுவனங்களும், இந்தியத் தொழில்முனைவோர்களும் உலக அரங்கில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படுகிறது.
‘ஃப்ரீ சார்ஜ்’ மூலம் டிஜிட்டல் சேவைத் துறையில் கவனம் பெற்றவர், ‘கிரெட்’ மூலம் தனித்துவமான ஃபின்டெக் பிராண்டை உருவாக்கியவர், இப்போது வாட்ஸ்அப்பின் அடுத்த அத்தியாயத்தை எழுதும் பொறுப்பை ஏற்றுள்ளார். அந்த அத்தியாயம் எப்படியிருக்கும் என்பதை தொழில்நுட்ப உலகம் மட்டுமல்ல, இந்திய ஸ்டார்ட்அப் உலகமும் எதிர்பார்ப்புடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.