

புதுடெல்லி: உலக தடகளப் போட்டியின் (20 வயதுக்குட்பட்டோர்) உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் பசந்த் குமார் மேக்வால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அமெரிக்காவின் ஓரேகானில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய இளம் வீரர் பசந்த் குமார் மேக்வால் 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டி 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவர் வெள்ளி பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
உலக தடகளப் போட்டியின்(யு20) உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய தடகள வீரர் ஒருவர் பெறும் முதல் வெள்ளிப் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பசந்த் குமார் மேக்வால், ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்திலுள்ள அனுப்கர் பகுதியைச் சேர்ந்தவர். இதே பிரிவில் அல்ஜீரியா வீரர் யூனஸ் அயாச்சி தங்கப் பதக்கத்தையும், பிரிட்டன் வீரர் ஓட்டிஸ் புலே வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
நேற்று நடைபெற்ற ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் ஷானவாஸ் கான் 7.84 மீட்டர் தாண்டி 3-ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.