

இந்தூர்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வதோதராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ள கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நாளை (18-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரு அணி வீரர்களும் இந்தூர் வந்தடைந்தன. இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி வீரர்கள் நேற்று ஹோல்கர் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
அதேவேளையில் இந்திய வீரர்களுக்கு கட்டாய பயிற்சியாக அமையவில்லை. இதனால் பெரும்பாலான வீரர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் இன்று நடைபெறும் பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது பந்துவீச்சு வியூகங்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஏனெனில் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு எந்த ஒரு கட்டத்திலும் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சுழலில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட் விளையாடி எளிதாக ரன்கள் சேர்த்தனர். அதிலும் டேரில் மிட்செல், இந்திய சுழற்பந்துவீச்சை நன்கு பதம்பார்த்தார். கால் நகர்வுகளை அருமையாக பயன்படுத்திய அவர், இந்திய அணியின் பந்துவீச்சு திட்டங்களை சீர்குலைத்தார்.
இதனால் ஒரு குழுவாக இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களால் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க முடியாமல் போனது. அந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 10 ஓவர்களை வீசி 82 ரன்களை தாரைவார்த்து இருந்தார். அதேவேளையில் முதல் போட்டியில் குல்தீப் யாதவ் 9 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க கடைசி போட்டி நடைபெறும் இந்தூர் ஹோல்கர் மைதானத்தின் எல்லைக்கோடுகள் சிறியவை. மேலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணி பந்துவீச்சு திட்டங்களில் சில மாறுதல்களை மேற்கொள்ளக்கூடும். பிரசித் கிருஷ்ணாவை நீக்கிவிட்டு அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
பிரசித் கிருஷ்ணா முதல் 2 ஆட்டங்களிலும் மோசமாக செயல்படவில்லை. எனினும் அவரது அவர், பேக் ஆஃப் தி லெந்த்தில் பந்துகளை வீசக்கூடியவர். இந்த வகையிலான பந்துவீச்சு சிறிய அளவிலான ஆடுகளங்களில் கைகொடுக்காது. இதனால் ஸ்விங் மற்றும் ஃபுல்லர் லென்ந்த்களை பயன்படுத்தும் அர்ஷ்தீப் சிங் இடம் பெறக்கூடும்.
மேலும் குல்தீப் யாதவ் பிளாட்டாக வீசுவதிலும், ஸ்டெம்புகளை குறிவைத்து வீசுவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இதுபோன்ற சிறிய ஆடுகளங்களில் பந்துகளை ஃபிளைட்டாக வீசினால் மைதானத்துக்கு வெளியே அடிக்க அதிக வாய்ப்
புகள் உள்ளன. பந்துகளின் நீளத்தை கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சுழற்பந்து வீச்சை பலப்படுத்தும் வகையில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக ஆயுஷ் பதோனி அறிமுக வீரராக களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.