

அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு 256 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த இஷான் கிஷன் உடன் இணைந்து 105 ரன்கள் சேர்த்தார் சஞ்சு சாம்சன். 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷனும் 54 ரன்களில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதுமின்றி முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார்.
16-வது ஓவரை வீசிய ஜேம்ஸ் நீஷம், அந்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த ஓவர் நியூஸிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது. அந்த ஓவருக்கு அடுத்த சில பந்துகள் இந்திய அணி பவுண்டரி விளாசவில்லை. ஹர்திக் பாண்டியா, 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற 256 ரன்கள் தேவைப்படுகிறது. திலக் வர்மா 8 ரன்கள் மற்றும் ஷிவம் துபே 26 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணி 24 ரன்கள் விளாசியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 280+ ரன்கள் எடுக்கும் சூழல் இருந்தது. இருப்பினும் அதை 255 ரன்கள் என்ற நிலையில் நியூஸிலாந்து கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது 256 ரன்கள் இலக்கை அந்த அணி விரட்டுகிறது.