ஜிம்பாப்வே அணியை 90 ரன்களில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா

ஜிம்பாப்வே அணியை 90 ரன்களில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா
Updated on
1 min read

ஹராரே: ஜிம்பாப்வே அணி உடனான இரண்டாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன்களில் வென்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த நாட்டு அணி உடன் டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது இந்தியா விளையாடி வருகிறது.

முன்னதாக, அயர்லாந்து (2 ஆட்டங்கள்) மற்றும் இங்கிலாந்து (5 ஆட்டங்கள்) சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை முழுவதுமாக இந்திய இழந்திருந்தது. இதில் இங்கிலாந்து அணி உடனான தொடரில் ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது. டி20 உலக சாம்பியனான இந்திய அணியின் தொடர் தோல்வி காரணமாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், ஜிம்பாப்வே தொடர் மூலம் இந்தியா மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது.

ஜிம்பாப்வே உடனான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்ரேயஸ் 25, வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்கள் எடுத்தனர். 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஜிம்பாப்வே விரட்டியது.

அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி சார்பில் பிரையன் பென்னட் 32, ரியான் 20, மருமானி 24 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் இந்தியா 90 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்காக பந்து வீசிய அபிஷேக் சர்மா 3, யஷ் தாக்குர் 2, பிரின்ஸ் யாதவ் 2, ரவி பிஷ்னோய், ஷிவம் துபே, திலக் வர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த தொடரின் அடுத்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

ஜிம்பாப்வே அணியை 90 ரன்களில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்தியா
ஜிம்பாப்வே அணியுடன் டி20-ல் இன்று மோதல்: ஸ்ரேயஸ் ஐயருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in