

வைபவ் சூர்யவன்ஷி
ஹராரே: நடப்பு யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார் இந்திய கிரிக்கெட் அணியின் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி.
ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் வெள்ளிக்கிழமை (பிப்.6) மதியம் தொடங்கிய இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக ஆரோன் ஜார்ஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஆரோன், 9 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் அபார ஃபார்மில் இருந்த வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இந்த ஆட்டத்தில் அவரது பேட்டில் பட்ட பந்துகளை பவுண்டரி எல்லை கோட்டுக்கு வெளியே விளாசினார்.
தொடக்கம் முதலே பிளாஸ்ட் மோடில் ஆடிய அவர் 55 பந்துகளில் சதம் கடந்தார். இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு 52 பந்துகளில் அவர் சதம் விளாசி இருந்தார். இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் இது சாதனையாக அமைந்துள்ளது.
சதம் கண்ட பிறகு தனது ஆட்டத்தில் மேலும் வேகத்தை கூட்டினார். அதன் பலனாக 71 பந்துகளில் 150 ரன்கள் கடந்தார். இதன் மூலம் இழையோட கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 150 ரன்களை எட்டிய பேட்ஸ்மேனாக வைபவ் சூர்யவன்ஷி அறியப்படுகிறார்.
இந்த ஆட்டத்தில் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார் சூர்யவன்ஷி. தலா 15 ஃபோர் மற்றும் சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இதன் மூலம் இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்திய அணி இந்த ஆட்டத்தில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது. 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டி வருகிறது. அந்த அணி 25 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.