

கொழும்பு: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ள 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரேமதாசா மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
இலங்கை அணி கடந்த 5 வருடங்களாக சொந்த மண்ணில் ஒருநாள் போட்டித் தொடரை இழக்காமல் உள்ளது. இந்த சாதனையை அந்த அணி தொடரச் செய்வதில் தீவிரம் காட்டக்கூடும்.
எனினும் அந்த அணிக்கு இங்கிலாந்து அணியின் சீனியர் பேட்ஸ்மேனான ஜோ ரூட் சவால் அளிக்கக்கூடும். ஏனெனில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஜோ ரூட் நேர்த்தியாக விளையாடக்கூடியவர். நடப்பு தொடரில் இரு ஆட்டங்களிலும் அவர், முறையே 61 மற்றும் 75 ரன்கள் சேர்த்திருந்தார்.