

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் நேற்று இலங்கை பிரதமர் லெவன் அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த பிரதமர் லெவன் அணிக்கு நிஷான் பெர்னாண்டோ, ரவிந்து ரசந்தா ஜோடி அற்புதமான தொடக்கம் கொடுத்தது. இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர்.
நிஷந்தா பெர்னாண்டோ 65 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு நிஷந்தா பெர்னாண்டோ, ரவிந்து ரசந்தா ஜோடி 20.4 ஓவர்களில் 110 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பசிந்து சூரியபண்டாரா 63 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் போல்டானார்.
நிதானமாக பேட் செய்த ரவிந்து ரசந்தா 143 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் சேர்த்த நிலையில் மானவ் சுதார் பந்தில் விப்நிகாமிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பவன் ரத்னாயகே 39, அஹான் விக்ரமசிங்கே 31, அஞ்ஜலா பண்டாரா 13, ரமேஷ் மெண்டிஸ் 32 ரன்களில் நடையை கட்டினர். கேப்டன் சோனல் தினுஷா 72 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை பிரதமர் லெவன் அணி 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது. கேஷரா நுவந்தா 9, திலும் சுதீரா ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வேகப்பந்து வீச்சாளரான குர்னூர் பிரார் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
ஷுப்மன் கில் காயம்
இதற்கிடையே நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், நேற்று இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இதனால் கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்தினார். ஷுப்மன் கில்லின் காயத்தை பிசிசிஐ மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.