

காலே: இலங்கை - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 116 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 460 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167, கே.எல்.ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்கள் சேர்த்தனர்.
குல்தீப் யாதவ் 12, பிரசித் கிருஷ்ணா 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் இந்திய அணி தனது கடைசி விக்கெட்டை இழந்தது. பிரசித் கிருஷ்ணா 2 ரன்களில் அசிதா பெர்னாண்டோ பந்தில் விக்கெட் கீப்பர் நிரோஷன் திக்வெல்லாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 116.4 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூரியா 4, கேஷரா நுவந்தா 3, அசிதா பெர்னாண்டோ 2 விகெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்ய தொடங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.
முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்திலேயே நிஷான் மதுஷ்கா பெர்னாண்டோ ரன் ஏதும் எடுக்காமல் முதல் சிலிப் திசையில் நின்ற தேவ்தத் படிக்கலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் சந்திமால் 4 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
நிதானமாக விளையாடிய தொடக்க வீரரான லகிரு உதரா 44 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் பந்தில் பேக்வேர்டு பாயின்ட் திசையில் நின்ற யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 14ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தை எக்ஸ்டிரா கவர் திசையில் அடித்த போது கேப்டன் ஷுப்மன் கில் இடதுபுறம் பாய்ந்து ஒற்றை கையால் அற்புதமாக கேட்ச் செய்தார்.
கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 41 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 26.1 ஓவர்களில் 90 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் சோனல் தினுஷாவுடன் இணைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிரோஷன் திக்வெல்லா சீராக ரன்கள் சேர்த்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
நிரோஷன் திக்வெல்லா 67 பந்துகளில் தனது 23-வது அரை சதத்தை கடந்தார். 6-வது விக்கெட்டுக்கு 217 பந்துகளில், 146 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்தார். நிரோஷன் திக்வெல்லா 115 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேஷரா நுவந்தா 18 பந்துகளில், 2 ரன்களுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தை சிலி பாயின்ட் திசையில் அடித்தார். அப்போது அங்கு பீல்டிங் நின்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடை பகுதியில் பட்டு காற்றில் பறந்த பந்தை ஷுப்மன் கில் கேட்ச் செய்தார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் ஜடேஜா கைப்பற்றிய 350-வது விக்கெட்டாக இது அமைந்தது.
இதையடுத்து களமிறங்கிய பிரபாத் ஜெயசூரியா 10 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடிய சோனல் தினுஷா 167 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் தனது முதல் சதத்தை விளாசினார். அவரது பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை பாலோ-ஆன் பெறுவதில் இருந்து தப்பித்தது.
அச்சுறுத்தலாக திகழ்ந்த சோனல் தினுஷாவை ரவீந்திர ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். 168 பந்துகளை சந்தித்த சோனல் தினுஷா 100 ரன்கள் சேர்த்தார். இதன்பின்னர் லகிரு குமரா 10 ரன்களில் மானவ் சுதார் பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார். முடிவில் இலங்கை அணி 79.4 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் மானவ் சுதார் 4, ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்ததும் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 178 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி 4-வது நாளான இன்று 2-வது இன்னிங்ஸை விளையாட உள்ளது.
20 ரன்னில் தப்பித்த திக்வெல்லா
நிரோஷன் திக்வெல்லா 20 ரன்களில் இருந்த போது மானவ் சுதார் பந்தில் சிலிப் திசையில் கொடுத்த கேட்ச்சை கே.எல்.ராகுல் தவறவிட்டார். இதற்கான பலனை இந்திய அணி அனுபவித்தது. ஏனெனில் சோனல் தினுஷாவுடன் இணைந்து நிரோஷன் திக்வெல்லா 6-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்து அசத்தினார். தனது முதல் சதத்தை நெருங்கிய நிலையில் திக்வெல்லா 80 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் பெருமூச்சு விட்டனர்.