

சிட்னி: இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. 4-வது போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடரும் உற்சாகத்தில் இங்கிலாந்து இதில் களமிறங்கியது.
நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், மெல்பர்னில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. மெல்பர்னில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டி 2 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த தொடரின் கடைசி போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இந்தப் போட்டியின் முதல் செஷனில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.
அப்போது 4-வது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி, அபார கூட்டணி அமைத்தது. 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த அவர்கள் உதவினர். ரூட் - 72 மற்றும் புரூக் - 78 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை, மழை உள்ளிட்ட வானிலை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், போலண்ட் மற்றும் நேசர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.