

துபாய்: தனது கால்பந்து வாழ்க்கையில் 1,000 கோல்களை அடிக்க வேண்டும் என்று விரும்புவதாக போர்ச்சுகல் அணி வீரரும், கால்பந்து ஜாம்பவானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நேற்று முன்தினம் குளோப் கால்பந்து வீரர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய கிழக்கு நாடுகள் பிரிவிலிருந்து சிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார்.
விழாவுக்கு பின்னர் அவர் கூறியதாவது: "எனக்கு தற்போது 40 வயதாகிறது. கால்பந்துப் போட்டிகளில் 1,000 கோல்களை அடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நேற்று முன்தினம் சவுதி புரோ லீக் போட்டியில் அல்-நசார் அணிக்காக 2 கோல்களை அடித்தேன். இதன்மூலம் எனது கோல்களின் எண்ணிக்கை 956-ஆக உயர்ந்துள்ளன.
எனவே, விரைவில் 1,000 கோல்களை அடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவரை எனக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் 1,000 கோல்கள் என்ற இலக்கை விரைவில் எட்டி விடுவேன். நான் தொடர்ந்து கால்பந்துப் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இதற்காகவே என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டு வருகிறேன்.
மத்திய கிழக்கு நாடுகள் என எங்கு விளையாடுகிறேன் என்பது முக்கியமல்ல. தொடர்ந்து கால்பந்து விளையாடி விளையாட்டை அனுபவிக்க வேண்டும். கோப்பைகளை வெல்ல வேண்டும். கோல்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதுதான் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் போர்ச்சுகல் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. இதுவரை அவர் 5 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுவரை அவர் போர்ச்சுகல் அணி மட்டுமல்லாமல் ரியல்மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட், ஜுவென்டஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். தற்போது அல் நசார் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார்.