

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஷப் பந்த் விலகி உள்ளார். இதனை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2025 சீசனை முன்னிட்டு ரூ.27 கோடிக்கு ஏலத்தின் மூலம் ரிஷப் பந்த்தை எல்எஸ்ஜி அணி ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டார்.
2025 மற்றும் 2026 என இரண்டு ஐபிஎல் சீசனிலும் மொத்தமாக 28 ஆட்டங்களில் விளையாடி 581 ரன்கள் எடுத்தார். அவர் தலைமையிலான எல்எஸ்ஜி அணி, 28 ஆட்டங்களில் விளையாடி 10-ல் மட்டுமே வெற்றி பெற்றது.
நடப்பு 14 ஆட்டங்களில் 4 வெற்றி மட்டுமே பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது எல்எஸ்ஜி. கடந்த 2022 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் எல்எஸ்ஜி விளையாடி வருகிறது. முதல் இரண்டு சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி மூன்றாம் இடம் பிடித்தது. அதற்கடுத்த மூன்று சீசன்களிலும் குரூப் சுற்றோடு வெளியேறியது.
அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ரிஷப் பந்த் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்றுள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என எல்எஸ்ஜி அணி தெரிவித்துள்ளது.
இது எளிதான முடிவு அல்ல. கேப்டனாக ரிஷப் பந்த் அணிக்குள் தன்னால் முடிந்தவற்றை கொண்டுவந்தார். அது அணிக்கு நல்ல அனுபவமாக அமைந்தது. இப்போது எங்கள் கவனம் அணியை வலுவாக கட்டமைப்பதில் உள்ளது என்று அந்த அணியின் கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.