

தரம்சாலா: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரே அணியாக ஆர்சிபி திகழ்கிறது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்யும்.
ஆர்சிபி அணி தனது கடைசி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் சீனியர் நட்சத்திரமான விராட் கோலி 60 பந்துகளில், 105 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையயாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. தொடரின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அணி அந்த அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து துவண்டுள்ளது. இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும்.
தரம்சாலா ஆடுகளத்தில் நடப்பு தொடரில் பஞ்சாப் அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வி கண்டிருந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் அந்த அணி 200+ ரன்களை குவித்த போதிலும் இலக்கை பாதுகாக்க முடியாமல் போனது. அதிலும் கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்களை தாரைவார்த்து வெற்றியை தவறவிட்டு இருந்தது.
நடப்பு சீசனில் சேவியர் பார்ட்லெட், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பந்துவீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக இவர்கள், அதிக ரன்களை வாரிக்கொடுத்துள்ளனர். இதனால் பஞ்சாப் அணி தனது பந்துவீச்சு கூட்டணியை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த ஆட்டத்தில் அஸ்மதுல்லா ஒமர்சாய் ஆல்ரவுண்டராக சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் இன்றைய ஆட்டத்தில் விஜயகுமார் வைஷாக் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
பேட்டிங்கை பொறுத்தவரையில் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானொலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில போட்டிகளாக இவர்களிடம் இருந்து ஒருங்கிணைந்த செயல் திறன் வெளிப்படவில்லை. இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இவர்கள் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
எனினும் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசைக்கு ஆர்சிபி அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அழுத்தம் கொடுக்கக்கூடும்.