

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி (நிகர ரன் விகிதம் 0.783), முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் (0.695 ), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (0.524) ஆகிய அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.
மீதம் உள்ள ஓர் இடத்துக்கு பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மல்லுக்கட்டுகின்றன. 2007-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது ராஜஸ்தான் அணி. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கும்.
மாறாக இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால் பஞ்சாப் (13 புள்ளிகள்), கொல்கத்தா (13 புள்ளி) அணிகளின் கடைசி ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும். ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 221 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 5 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. வைபவ் சூர்யவன்ஷி 93 ரன்களும், துருவ் ஜூரெல் 53 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தனர்.
இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் வான்கடே மைதானத்தின் அளவு சிறிது என்பதால் இதை ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இதே மைதானத்தில் ஜெய்ஸ்வால் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசியிருந்தார். இதனால் அவர், மீது மீண்டும் எதிர்பார்ப்பு உள்ளது.
கேப்டன் ரியான் பராக் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. ஆனால் இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. இது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. இதுகுறித்த விளக்கம் அளித்த ரியான் பராக், அணிக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் இருந்ததாக தெரிவித்து இருந்தார்.
ரியான் பராக்கின் காயத்தின் தன்மையை ராஜஸ்தான் அணியின் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவர், முழு உடற்தகுதியை அடைந்து களமிறங்குவார் என அணி நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை எப்போதோ இழந்துவிட்டது. எனினும் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் அந்த அணி தீவிரம் காட்டக்கூடும்.