

சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணி வீரர்கள்
புடாபெஸ்ட்: நடப்பு யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஆர்செனல் அணியை வீழ்த்தி பட்டத்தை தக்கவைத்தது பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணி.
ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் தொடரில் (நடப்பு சீசன்) மொத்தம் 36 கால்பந்து கிளப் அணிகள் மோதின. இதில் இறுதிப் போட்டிக்கு, பிஎஸ்ஜி அணியும் ஆர்செனல் அணியும் தகுதி பெற்றன. இந்த ஆட்டம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.
சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஆர்செனல், முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெல்லும் நோக்கில் களம் கண்டது. மறுபக்கம் நடப்பு சாம்பியனான பிஎஸ்கே அணியோ பட்டத்தை தக்க வைக்க முனைப்பு காட்டியது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தினார் ஆர்செனல் வீரர் ஹாவர்ட்ஸ். அதன் பின்னர் பிஎஸ்ஜி அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய விடாப்பிடியாக முட்டி மோதினர். அதை லாவகமாக தங்களது தடுப்பாட்டம் மூலம் ஆர்செனல் வீரர்கள் தடுத்தனர்.
முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்செனல் முன்னிலையில் இருந்தது. அதன் பின்னர் இரண்டாவது பாதியின் 64-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்பபை பயன்படுத்தி கோல் பதிவு செய்தார் உஸ்மான் டெம்பலே. அதன் பிறகு இரு அணிகளும் கோல் பதிவு செய்யவவில்லை. இறுதியில் 90 நிமிடங்கள் மற்றும் ஸ்டாப்பேஜ் டைம் முடிந்த பிறகும் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்தது.
அதனால் மேலும் முப்பது நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதிலும் கோல் பதிவாகவில்லை. பிஎஸ்ஜி அணியின் கோல் முயற்சிகளை ஆர்செனல் கோல்கீப்பர் ரயான் தடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிஎஸ்ஜி அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்கு அடுத்ததாக தொடர்ந்து இரண்டு முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற அணியானது பிஎஸ்ஜி. அந்த அணியின் வெற்றியை பிரான்ஸில் உள்ள பிஎஸ்ஜி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.