

செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூரின் கடைசி தொடரான சிங்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயினிட் லூயிஸ் கிளப்பில் நேற்று தொடங்கியது.
9 சுற்றுகள் கொண்ட கிளாசிக் போட்டியான இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் சாமுவேல் செவியனை எதிர்த்து விளையாடினார்.
பிரக்ஞானந்தாவுக்கு சுமாரான தொடக்கமாக அமைந்தது. கருப்புக் காய்களுடன் விளையாடிய அவர், செவியனுக்கு எந்தவொரு வாய்ப்பையும் விட்டுக்கொடுக்கவில்லை.
அதேவேளையில் செவியனும் ஆட்டத்தை அதிக சிக்கலாக்க விரும்பாமல் காய்களை நகர்த்தினார். 11-வது நகர்த்தலுக்குள்ளேயே ஒரு ஜோடி யானைகள் கைமாறின.
அதன் பிறகு இருவரும் ராணி மற்றும் சிறிய காய்கள் மட்டுமே கொண்டு இறுதி ஆட்ட நிலையை எட்டும் வரை காய்களின் பரிமாற்றம் தொடர்ந்தது.
இரு வீரர்களிடமும் தலா இரண்டு குதிரைகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், 48-வது நகர்த்தலின் போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளி வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா தனது முதல் சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரஸ்டுடன் மோதினார். இதில் ஃபேபியானோ கருனா 55-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவ் - அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் - அமெரிக்காவின் வெஸ்ஸி சோ, நெதர்லாந்தின் அனிஷ் கிரி - பிரான்ஸின் மேக்ஸிம் வாச்சியர் லாக்ரேவ் ஆகியோர் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.