

செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூர் தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்று வந்தது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 19-9 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
2 கிளாசிக்கல் போட்டியின் முடிவில் 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்த பிரக்ஞானந்தா ரேப்பிடு போட்டியில் வின்சென்ட் கீமரை அடுத்தடுத்த ஆட்டங்களில் தோற்கடித்தார். இதன் வாயிலாக தனது முன்னிலையை பிரக்ஞானந்தா 17-3 அதிகரித்துக் கொண்டதுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை உறுதி செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவின் முதல் ஆட்டத்திலும் பிரக்ஞானந்தா வெற்றியை வசப்படுத்தினார். இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த வின்சென்ட் கீமர் பிளிட்ஸ் பிரிவின் கடைசி 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியனான அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
பேபியோனோ கருனா அரை இறுதி சுற்றில், சகநாட்டைச் சேர்ந்த வெஸ்ஸி சோவை 18-9 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியும் 2 கிளாசிக்கல் ஆட்டம், 2 ரேப்பிடு ஆட்டம், 4 பிளிட்ஸ் ஆட்டத்தை உள்ளடக்கியது. இதில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு சுமார் ரூ.1.91 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடத்தை பெறும் வீரர் ரூ.1.20 கோடியை பெறுவார். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வின்சென்ட் கீமர், வெஸ்லி சோ மோது கின்றனர்.