

டொராண்டோவில் நடைபெற்ற போர்ச்சுகல் மற்றும் குரேஷியா அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தில் பரபரப்பான கடைசி நிமிடங்களும், VAR மூலம் நிராகரிக்கப்பட்ட சமநிலை கோல் சர்ச்சையிலும் குரோஷியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல், உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி - 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
போட்டியின் கூடுதல் நேரத்தில் ரஃபேல் லியோ வழங்கிய பந்தை கோன்சாலோ ராமோஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். அந்த நேரத்தில் முன்பே பெனால்டி மூலம் கோல் அடித்திருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மாற்று வீரர்களுக்கான இருக்கையில் இருந்து ஆட்டத்தை கவனித்துக் கொண்டிருந்தார்.
68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றிய ரொனால்டோ, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் தனது முதல் கோலை அடித்து போர்ச்சுகலுக்கு சமநிலையை பெற்றுத் தந்தார். எனினும், இறுதியில் ராமோஸின் கோலே போர்ச்சுகலுக்கு வெற்றியை உறுதி செய்தது.
ஆட்டத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடைசி தருணங்களில் குரோஷியா 2-2 என சமநிலையை எட்டியதாக நினைத்தது. ஆனால் மரியோ பசாலிச் ஆஃப்சைடில் இருந்ததாக VAR பரிசீலனையில் தீர்ப்பளிக்கப்பட்டதால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த குரோஷியா ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசியதுடன், விசில் அடித்து எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
VAR சர்ச்சையின் உச்சம்! குரோஷியாவின் கூடுதல் நேர சமநிலை கோல் ஏற்கப்பட வேண்டுமா?
கூடுதல் நேரத்தின் இறுதி தருணங்களில், இவான் பெரிசிச் பந்தை பெனால்டி பகுதிக்குள் உயரமாக அனுப்பினார். அதை மாரியோ பசாலிச் தலையால் திசை மாற்ற, பந்து யோஷ்கோ க்வார்டியோல் காலில் விழுந்தது. அவர் எளிதாக வலையில் தள்ளி கோல் அடித்தார்.
குரோஷியா வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போதும், கோல் உடனடியாக அங்கீகரிக்கப்படவில்லை. அதன்பின் நீண்ட நேர VAR பரிசோதனை நடைபெற்றது. அந்த வீடியோ ரிவியூவில் குரோஷிய வீரர் ஐகோர் மடனோவிச் பந்தை தொட்டதாகக் கூறப்பட்டதால், அவர் ஆஃப்சைட் நிலையில் இருந்ததாக VAR முடிவு செய்தது.
ஆனால், குரோஷிய வீரர் ஐகோர் மடானோவிச் உண்மையில் பந்தை தொட்டார் என்பதை நிரூபிக்கும் தெளிவான காட்சி எதுவும் இல்லாத நிலையிலும் கோல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியின் கடைசி தருணத்தில் நிகழ்ந்த இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தெளிவான ஆதாரம் இல்லாமல் VAR எப்படி கோலை ரத்து செய்ய முடியும்?’ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முன்னிலை பெற்ற குரோஷியா:
ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் ஜோசிப் ஸ்டானிசிச் வழங்கிய கிராஸை பயன்படுத்தி இவான் பெரிசிச் கோல் அடித்தார். அவரது வலுவான ஷாட் குரோஷியாவுக்கு 1-0 முன்னிலையை வழங்கியது.
அதன் பின்னர் 68-வது நிமிடத்தில், பெனால்டி பகுதியினுள் வேகாவை ஃபவுல் செய்து தவறாக தடுத்ததால் போர்ச்சுகலுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக மாற்றி 1-1 என ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார். இதுதான் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் அவரது முதல் கோல் என்பது ஆச்சரியப்படத் தகுந்த ஓர் புள்ளி விவரமே.
பின்னர் கூடுதல் நேரத்தின் 94-வது நிமிடத்தில் ரஃபேல் லியோவின் துல்லியமான கிராஸை கோன்சாலோ ராமோஸ் தலையால் முட்டி கோலாக்கி போர்ச்சுகலை 2-1 என முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இதற்குப் பிறகு 103-வது நிமிடத்தில் குரோஷியா அடித்த சமநிலை கோல் ஆஃப்சைடு காரணமாக VAR மூலம் நிராகரிக்கப்பட்டதால் போர்ச்சுகலின் வெற்றி உறுதியானது.
முக்கிய அம்சங்கள்:
>> போர்ச்சுகல் அடுத்த சுற்றில் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
>> குரோஷியாவின் நட்சத்திர வீரர் லூகா மோட்ரிச், 2018 உலகக் கோப்பையில் இரண்டாம் இடமும், 2022 உலகக் கோப்பையில் மூன்றாம்
இடமும் பெற்ற அணியை வழிநடத்தியிருந்தாலும், தனது ஐந்தாவது உலகக் கோப்பை முயற்சியில் மீண்டும் முன்னேற முடியவில்லை.
>> 53-வது நிமிடத்தில் இவான் பெரிசிச் கோல் அடித்து குரோஷியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
>> 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் தனது முதல் கோலை பதிவு செய்து போர்ச்சுகலுக்கு சமநிலையை பெற்றுத் தந்தார்.
>> 94-வது நிமிடத்தில் கோன்சாலோ ராமோஸ் தலையால் கோல் அடித்து போர்ச்சுகலுக்கு வெற்றியை தேடித்தந்தார்.
>> 103-வது நிமிடத்தில் குரோஷியாவின் சமநிலை கோல் VAR பரிசீலனையில் ஆஃப்சைடு காரணமாக (தவறாக?) நிராகரிக்கப்பட்டது.