இஸ்லாமாபாத்: இந்தியாவைச் சேர்ந்த ஓர் அணிக்காக கபடிப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உபைதுல்லா ராஜ்புத். கபடி வீரரான இவர் பஹ்ரைனில் அண்மையில் நடைபெற்ற தனியார் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஓர் அணிக்காக விளையாடினார். இந்தப் போட்டியின் போது இந்திய அணியின் பனியனை உபைதுல்லா ராஜ்புத் அணிந்திருந்தார். இந்நிலையில் உபைதுல்லா ராஜ்புத்துக்கு காலவரையற்ற தடையை பாகிஸ்தான் கபடி சம்மேளனம் (பிகேஎப்) விதித்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தான் கபடி சம்மேளன கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வெளிநாட்டு அணிக்காக விளையாடுவதற்காக பாகிஸ்தான் கபடி சம்மேளனத்தின் தடையில்லா சான்றிதழை உபைதுல்லா பெறவில்லை. எனவே அவருக்கு காலவரையற்ற தடை விதிக்கப்படுகிறது என்று சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உபைதுல்லா ராஜ்புத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.