

கொழும்பு: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவை 32 ரன்களில் வீழ்த்தியது.
‘குரூப் - ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், 41 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். பாபர் அஸம், 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். ஷதாப் கான், 12 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அமெரிக்க பந்து வீச்சாளர் ஷேட்லி, 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அமெரிக்க அணி விரட்டியது. அந்த அணியின் ஷயான் ஜஹாங்கிர் 49 மற்றும் ஷுபம் 51 ரன்கள் எடுத்தனர். மிலிந்த் குமார் 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் அந்த அணிக்கு இது இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது. முன்னதாக, முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 16 ஓவர்களை பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசி இருந்தனர். அதில் உஸ்மான் தாரிக் 3, ஷதாப் கான் 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ஃபர்ஹான் வென்றார். வரும் 15-ம் தேதி அன்று கொழும்பில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாட உள்ளது.