

அனந்தபூர்: 2025-26-ம் ஆண்டுக்கான சந்தோஷ் கோப்பைக்கான 79-வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ஆந்திராவுடன் விளையாடியது.
அனந்தபூரில் உள்ள ஆர்டிடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜெசுராஜ் (45 மற்றும் 65-வது நிமிடங்கள்) 2 கோல்கள் அடித்தார். தேவதத் (21-வது நிமிடம்), நந்தகுமார் அனந்தராஜ் (35-வது நிமிடம்), சுராஜ் குமார் (82-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழ்நாடு அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை வீழ்த்தியிருந்தது. தனது அடுத்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி நாளை (21-ம் தேதி) புதுச்சேரி அணியுடன் மோதுகிறது.