

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் திலக் வர்மா. அவரது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பிரதானமாக அமைந்தது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஏப்.20) குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் மும்பை அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. இதில் திலக் வர்மா 45 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்ட நாயகன் விருதை திலக் வர்மா வென்றார்.
“முதல் சதம் என்பது ரொம்பவே ஸ்பெஷலானது. இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமானது. எங்களுக்கு அதிக நேரம் இல்லை. இனி வரும் ஒவ்வொரும் ஆட்டமும் எங்களுக்கு முக்கியம். அதே நேரத்தில் கடந்த ஐந்து ஆட்டங்களாக என்னால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. அதனை இந்த ஆட்டத்தில் அதை செய்ய வேண்டும் என கருதினேன்.
அதனால் முதல் 20 பந்துகள் மிகவும் நிதானமாக விளையாடினேன். அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து விளையாடினேன். இந்த இன்னிங்ஸில் எதையும் நான் பெருசாக செய்யவில்லை. அடிப்படையை ஒழுங்காக செய்தேன். அவ்வளவுதான். அதற்கு நல்ல முடிவு கிடைத்தது.
நமன் உடனான பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது. அதன் பின்னர் இன்னிங்ஸை நான் கொண்டு சென்ற விதத்தை எண்ணி பெருமை கொள்கிறேன்” என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.