

புதுடெல்லி: அர்ஜெண்டினா அணியின் கால்பந்து நட்சத்திரமான லயோனல் மெஸ்ஸி கடந்த 14-ம் தேதி வணிக நோக்கிலான 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தனது குழுவினருடன் இந்தியா வந்தார்.
அவருடன் சக அணியைச் சேர்ந்த ரோட்ரிகோ டி பால், உருகுவே கால் பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் கொல்கத்தா, ஹைதரபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக நிறைவு நாளான நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மெஸ்ஸி குழுவினர் வந்தனர்.
மோசமான வானிலை காரணமாக காலை 10.45 மணிக்கு வரவேண்டிய மெஸ்ஸியின் விமானம், பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. அவரை பார்ப்பதற்காக மைதானத்தில் 25 ஆயிரம் ரசிகர்கள் கூடியிருந்தனர். மைதானத்தில் நுழைந்த மெஸ்ஸி, ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
30 நிமிட நிகழ்வின் முடிவில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, மெஸ்ஸியை சந்தித்து அவருக்கு 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் கையெழுத்திட்ட பேட்டை பரிசாக வழங்கினார். மேலும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை போட்டியை காண்பதற்கான அழைப்பும் வழங்கப்பட்டது.
அத்துடன் மெஸ்ஸிக்கு இந்திய அணியின் ஜெர்சியும் பரிசாக கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மெஸ்ஸியை முன்னாள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் பாய்ச்சுங் பூட்டியா சந்தித்தார்.
சர்ச்சையில் நடிகை சுபஸ்ரீ: கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மெஸ்ஸி வந்தபோது அவருடன் நடிகை சுபஸ்ரீ புகைப்படங்கள் எடுத்தார். மைதானத்தில் சுபஸ்ரீ சுமார் 20 நிமிடங்கள் செலவிட்டதாக தெரிகிறது. மெஸ்ஸியுடன் எடுத்த படங்களை சுபஸ்ரீ சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதையடுத்து விளையாட்டு வீரர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நடிகைக்கு என்ன வேலை என்ற ரீதியில் இணையதளத்தில் பலர், நடிகை சுபஸ்ரீக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக சுபஸ்ரீயின் கணவரும், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராஜ் சக்ரவர்த்தி திடாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.