

லக்னோ: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் கர்நாடகா - உத்தராகண்ட் அணிகள் லக்னோவில் விளையாடி வந்தன. இதன் முதல் இன்னிங்ஸிங் கர்நாடகா 736 ரன்கள் குவித்தது. உத்தராகண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
503 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய கர்நாடகா அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 63.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய கர்நாடகா அணி 74.3 ஓவர்களில் 323 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 827 ரன்கள் இலக்குடன் பேட் செய்த உத்தராகண்ட் அணி 62 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கர்நாடகா அணி சார்பில் ஸ்ரேயஸ் கோபால் 3, பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.